வாகன விபத்தில் இளைஞர் உட்பட மூவர் பலி

 

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மூன்று வீதி விபத்துகளில் இளைஞர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 

மாங்குளம், அம்பன்பொல மற்றும் வரகாபொல பொலிஸ் பிரிவுகளில் நேற்று (10) இந்த விபத்துகள் நிகழ்ந்துள்ளன. 

மாங்குளம் - முல்லைத்தீவு வீதியில் உள்ள ஒலுமடு பகுதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, பாலத்தின் கொங்கிரீட் தூணில் மோதியதில், மோட்டார் சைக்கிள் செலுத்துனர் பாலத்தின் அடியில் உள்ள ஆற்றில் விழுந்து இறந்தார். 

உயிரிழந்தவர் பரந்தன் பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞன் என தெரியவந்துள்ளது. 

இதற்கிடையில், அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கமுவ-மொரகொல்லாகம வீதியில் உள்ள வலத்வெவ பகுதியில், மோட்டார் சைக்கிள், செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வடிகானில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 

விபத்தில் பலத்த காயமடைந்த செலுத்துனர், எஹெட்டுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இறந்தவர் அபோகமவைச் சேர்ந்த 65 வயதானவர் என தெரியவந்துள்ளது. 

இதற்கிடையில், கொழும்பு-கண்டி வீதியில் உள்ள தொலங்கமுவ பகுதியில் முச்சக்கர வண்டியொன்று மற்றொரு முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முயன்றபோது, ​​சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல், அது வீதியில் கவிழ்ந்து எதிரே வந்த ஒரு கெப் வண்டியில் மோதியது. 

விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி பலத்த காயமடைந்து வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். 

இறந்தவர் நெலும்தெனிய பகுதியைச் சேர்ந்த 39 வயதானவர் என தெரியவந்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form