பௌத்த தர்மத்தின் வழிகாட்டலுடன் தன்னிறைவு பெற்ற நாடாக முன்னேறுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பொசொன் தின வாழ்த்துச் செய்தியை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பௌத்த தர்மத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்திய மஹிந்த தேரரின் வருகையை நினைவுகூர்ந்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இலங்கை மக்கள் மிகுந்த பக்தியுடன் பொசொன் பௌர்ணமி விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.
மஹிந்த தேரரின் வருகையுடன், பௌத்த தர்மம் மட்டுமல்லாமல், கலைகள் மற்றும் கலாசாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய 18 குலங்களைச் சேர்ந்த நிபுணர்களின் வரவும் இலங்கைக்கு கிடைத்ததாக வரலாற்று ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்தக் கலைகள் இலங்கையின் கலாசாரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
அதுவரை மரங்களையும் கற்களையும் வணங்கிய மக்களின் வாழ்க்கைக்கு பௌத்த தர்மம் அர்த்தமும், சரியான வழிகாட்டுதலும் வழங்கியது. இந்த தர்மமும் கலைகளும் இணைந்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையின் முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்டன. மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் பௌத்த தர்மத்துடன் இணைந்து, சிறந்த அரச நிர்வாகத்தையும், மக்களின் நல்வாழ்வையும் உருவாக்குவதற்கு முக்கிய காரணமாக அமைந்தன. இதன் விளைவாக, இலங்கை உலகளவில் "கீழைத்தேய தானியக் களஞ்சியம்" எனப் புகழ்பெற்றது.
எனினும், இன்று நம் நாடு அந்த உயர்ந்த நிலையில் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. எனவே, மீண்டும் நாம் ஒரு தன்னிறைவு பெற்ற, வளர்ச்சியடைந்த நாடாக எழுச்சி பெற வேண்டும். இதற்கு, பௌத்த தர்மத்தின் சரியான வழிகாட்டுதலைப் பின்பற்றி முன்னேறுவதற்கு ஒருமித்து செயல்பட வேண்டும். மற்ற மதங்களுக்கு உரிய மரியாதையையும் இடத்தையும் வழங்கியவாறு, பௌத்த தர்மத்தைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பாக இருக்க வேண்டும்.
இந்தப் பொறுப்பை உறுதியுடன் நிறைவேற்ற, இந்த பொசொன் தினத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.
Tags
Sri Lanka