'திட்வா' புயலினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி - கண்டி பிரதான வீதி 18 நாட்களுக்குப் பிறகு போக்குவரத்திற்காக இன்று (15) திறக்கப்பட்டது.
மண்சரிவு காரணமாக வீதியில் வீழ்ந்திருந்த மண் அகற்றப்பட்டு வீதி சீரமைக்கப்பட்டுள்ளதுடன், வீதிக்கு மேலுள்ள மண்மேடு சரிந்து விழும் அபாயம் காணப்படுவதால், அதற்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் வரை போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் பாதுகாப்பாக வீதி அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடத்தில் பணிகள் நிறைவடையும் வரை அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை, சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன் இவ்வீதியில் கனரக வாகனப் போக்குவரத்திற்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
வீதியைத் திருத்தும் பணிகள், இராணுவத்தின் 6 ஆவது பொறியியல் படைப்பிரிவு, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நாவலப்பிட்டி மற்றும் எத்கல பொலிஸ் நிலையங்கள், பஸ்பாகே கோரல பிரதேச சபை உள்ளிட்ட பல தரப்பினரின் பங்குபற்றலுடன் முன்னெடுக்கப்பட்டன.
வீதியைத் திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜயசிங்க, பஸ்பாகே கோரல பிரதேசத்திற்குள் அனர்த்தத்திற்கு உள்ளான பெரும்பாலான வீதிகள் தற்போது திருத்தப்பட்டு நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன் உலப்பனை - கண்டி வீதியின் புனரமைப்புப் பணிகளை இன்னும் ஒரு வாரத்தில் நிறைவு செய்து போக்குவரத்திற்காகத் திறக்க எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Tags
Sri Lanka
