அசோக ரன்வல மதுபோதையில் வாகனம் ஓட்டினாரா? உண்மையை வெளியிட்ட பொலிஸார்”!

 


சப்புகஸ்கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தின் போது முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல மதுபோதையில் இருந்தாரா என்பதைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைக்கான அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல ஓட்டிச் சென்ற ஜீப் வாகனம், கடந்த நேற்றுமுன்தினம்(11) இரவு சப்புகஸ்கந்த, தெனிமல்ல பகுதியில் வைத்து உந்துருளி மற்றும் சிற்றூந்து ஒன்றின்மீது மோதியது.

இந்த விபத்தில் சிற்றூந்தில் பயணித்த ஏழு மாதக் குழந்தை, அதன் தாய் மற்றும் பாட்டி ஆகியோர் காயமடைந்தனர்.

காயமடைந்த குழந்தை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனையிலும், தாயும் பாட்டியும் கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே உயர் இரத்த அழுத்தம் காரணமாக அசோக ரன்வலவும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்தின்போது, அவர் மதுபோதையில் இருந்ததாக விபத்துக்குள்ளான குழந்தையின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இந்தநிலையில், விபத்தின் போது அசோக்க ரன்வல மதுபோதையில் இருந்தாரா என்பதைக் கண்டறியப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எந்தத் தரப்பினராக இருந்தாலும் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

அசோக ரன்வல நேற்று மாலை கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் மதுபோதையில் இருந்தாரா என்பதைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்

அதேநேரம், விபத்தில் காயமடைந்த 7 மாதக் குழந்தையும் பாட்டியும் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குழந்தையின் தாய் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார். பாட்டிக்கு காலில் எலும்பு முறிவும், தாய்க்கு நெற்றியில் பலத்த காயமும் ஏற்பட்டு சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், அசோக்க ரன்வல தரப்பில் இருந்து தமது குழந்தையின் நிலை குறித்து இதுவரை எவரும் ஆராய்ந்த பார்க்கவில்லை என்று குழந்தையின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form