இந்தியாவில் திடீரென அதிகரித்த பணவீக்கம்

 

இந்தியாவின் மொத்த விற்பனை விலை பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 8.3 சதவீதமாக அதிரடியாக உயர்ந்துள்ளது. 

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, மார்ச் மாதத்தில் 3.88 சதவீதமாக இருந்த பணவீக்கம், ஒரே மாதத்தில் இவ்வளவு பெரிய உயர்வைச் சந்தித்திருப்பது கடந்த மூன்றரை ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும் என தெரிவிக்கப்படுகின்றது. 

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் எரிசக்தி செலவினங்கள் அதிகரித்தது ஆகியவை ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திலும் எரிபொருள் மற்றும் உற்பத்திப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளதே இதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகின்றது. 

கடந்த ஆண்டு ஏப்ரலில் வெறும் 0.85 சதவீதமாக இருந்த இந்த பணவீக்கம், தற்போது கனிய எண்ணெய்கள், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் அடிப்படை உலோகங்களின் விலை அதிகரிப்பால் இந்த நிலையை எட்டியுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. 

எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவில் பணவீக்கம் 42 மாதங்களில் இல்லாத உச்சமாக 24.71 சதவீதமாக உயர்ந்துள்ளதும் கவலையளிப்பதாக உள்ளது. 

உணவுப் பொருட்களைப் பொறுத்தவரை பணவீக்கம் 1.98 சதவீதமாகச் சற்றே உயர்ந்துள்ளது. 

இருப்பினும், உணவு அல்லாத பொருட்களில் பணவீக்கம் 12.18 சதவீதமாகவும், உற்பத்திப் பொருட்களில் 4.62 சதவீதமாகவும் அதிகரித்துள்ளன. 

அதேநேரம் மே மாதத்தில் இந்த ஒட்டுமொத்தப் பணவீக்கம் 9 சதவீதத்தைத் தொடக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form