குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தினசரி தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் 437 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, நேற்று (08) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது 33,024 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அதன்போதே இந்த சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 15 நபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 135 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 65 நபர்களும், அலட்சியமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 68 நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4,189 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Tags
Sri Lanka
