கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில், நேற்று (19) மாலை 4:10 மணியளவில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை வந்தடைந்தபோது, கைவிடப்பட்ட பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறித்த பையை மீட்டு, புகையிரத அதிபரிடம் ஒப்படைத்தனர்.
பையைத் திறந்து பரிசோதித்தபோது, அதில் 252 பெக்கெட்டுகளில் பொதி செய்யப்பட்ட 200 கிராம் ‘ஜஸ்’ வகை போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
விரைந்து செயல்பட்ட பொலிஸார், பையை மீட்டு, அதிலிருந்த போதைப் பொருளை கைப்பற்றினர்.
இந்தப் போதைப்பொருளை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.